பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!
புனித பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை (28) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நாட்டின் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என இலங்கை கலால் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதேவேளை, பொசன் பௌர்ணமி விழாவின் பிரதான கேந்திர மையமாக விளங்கும் அனுராதபுரம் புனித பூமியை உள்ளடக்கிய மிஹிந்தலை, மத்திய நுவரகம பலாத்த மற்றும் மஹவிலச்சிய ஆகிய பகுதிகளில் நேற்று (26) முதல் எதிர்வரும் ஜூன் மாதம் 02 ஆம் திகதி வரை அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் முழுமையாக மூடப்பட்டிருக்கும் என கலால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. புனித காலத்தில் இப்பிரதேசங்களின் அமைதியையும் ஆன்மீகத் தன்மையையும் பேணும் பொருட்டே இந்த நீண்டகாலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த உத்தரவை மீறி, சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்கள் அல்லது மதுபானசாலைகளைத் திறந்து வைப்பவர்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாகத் தமக்குத் தகவல்களை வழங்க முடியும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கென 1913 என்ற துரித அவசரத் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி சட்டவிரோத செயல்கள் குறித்து கலால் திணைக்களத்திற்குத் தெரிவிக்க முடியும் என நுகர்வோரிடமும் பொதுமக்களிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


