கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான சந்தை வீதியில், 16 வயதுடைய சிறுவன் ஒருவனால் விபரீதமான முறையில் செலுத்தப்பட்ட சிற்றூர்தி (Van) ஒன்று மோதி, வீதியோரக் கடைகள் மற்றும் மின் கம்பங்களுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
விபத்துக்குள்ளான சிற்றூர்தியானது வழக்கமாகச் சந்தைக்கு மரக்கறிப் பண்டங்களை ஏற்றி வரும் வாகனமாகும். இன்று (27) வழமை போல் வந்திருந்த போது, அதன் சாரதி வேலைப்பளு காரணமாக வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியில் சென்றிருந்தார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட 16 வயதுடைய சிறுவன், வாகனத்தின் சாவியைத் திருட்டுத்தனமாக எடுத்துக்கொண்டு சிற்றூர்தியை இயக்கிச் சென்றுள்ளார்.
சிறுவனுக்குப் போதிய வாகனப் பயிற்சி இல்லாததால், பிரதான வீதியில் கட்டுப்பாட்டை இழந்த சிற்றூர்தி, வீதியோரத்தில் இருந்த மின்சாரக் கம்பம், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான சமிஞ்சை (சிக்னல்) கம்பம், நிறுத்தப்பட்டிருந்த ஒரு சைக்கிள் மற்றும் பல கடைகளின் பொருட்களை அடுத்தடுத்து மோதித் தள்ளியது. இந்த விபத்தினால் அப்பகுதியில் பெரும் பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
விபத்தை ஏற்படுத்திய 16 வயதுச் சிறுவன், உடனடியாக அருகில் இருந்த கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்து சரணடைந்துள்ளார்.
இது குறித்துப் பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது, தனக்குத் தெரியாமல் சிறுவன் சாவியை எடுத்துக்கொண்டு திருட்டுத்தனமாகச் சிற்றூர்தியை ஓட்டிச் சென்றுள்ளதாக அதன் சாரதி வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.



