இஸ்லாமியர்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் மே 28ஆம் திகதி வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஹிஜ்ரி 1447 ஆம் ஆண்டின் துல்கஃதா மாதத்தின் 29ஆம் தினமான இன்று (17), கொழும்பு பெரிய பள்ளிவாசலில் துல்ஹஜ் மாதத்திற்கான தலைப் பிறை தீர்மானிக்கும் மாநாடு நடைபெற்றது.
இன்றைய தினம் இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதாக நம்பகமான சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை. இதன் காரணமாக, நடப்பு துல்கஃதா மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்தி செய்து, நாளை மறுதினம் (மே 19) துல்ஹஜ் மாதத்தின் முதலாம் நாளாகக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, துல்ஹஜ் பிறை 10 ஆம் நாளான எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினமாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
இன்றைய விசேட மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை (ACJU), முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



