2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 இல் ஆரம்பம்! அனுமதி அட்டைத் திருத்தங்களுக்கு ஓகஸ்ட் 03 இறுதி நாள்!
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் (Admission Cards) ஏற்கனவே உரிய வலையக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அனைத்து அதிபர்களும் தமது பாடசாலைக்குரிய வலையக் கல்வி அலுவலகத்தின் பரீட்சைப் பாடத்திற்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவிக்கல்விப் பணிப்பாளரிடமிருந்து அவற்றை உடனடியாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்குத் தபால் மூலம் அனுப்பிவைக்கப் பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகளில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பின், அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைக் (Password) பயன்படுத்தி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து அத்திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.
தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் தமது அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் இருப்பின், திணைக்களத்தின் இணையத்தளத்திற்குப் பிரவேசித்து, தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் அவற்றை இணையவழியில் (Online) திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதி அட்டைத் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் காலம் ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையும் என்பதுடன், அந்தத் திருத்தக் காலம் எக்காரணம் கொண்டும் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைத் திணைக்களம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
இந்தப் பரீட்சை தொடர்பில் ஏதேனும் விசாரணைகள் இருப்பின், பின்வரும் இலக்கங்கள் மற்றும் முகவரிகள் ஊடாகத் தொடர்புகொள்ள முடியும்:
- உடனடி அழைப்பு இலக்கம்: 1911
- தொலைபேசி இலக்கங்கள்: 011-2784208 / 011-2784537
- தொலைநகல் (Fax): 011-2784422
- மின்னஞ்சல்: gcealexamsl@gmail.com



