‘அஸ்வெசும’ நலன்புரிப் பலன்கள் திட்டத்தின் முதலாம் கட்ட விபரங்களை இற்றைப்படுத்தும் (Update) நடைமுறைக்குரிய தேசிய கணக்கெடுப்புப் பணிகள், வரும் மே மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக நலன்புரிப் பலன்கள் சபை அறிவித்துள்ளது.
நாட்டின் உண்மையான பொருளாதாரக் கஷ்டங்களை எதிர்நோக்கும், அரச நலன்புரி உதவிகள் அவசியமாகத் தேவைப்படும் மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு விரைவாக நிவாரணங்களை வழங்குவதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
யாரேனும் நலன்புரிப் பலன்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் போலியான அல்லது தவறான தகவல்களை வழங்கினால், அதனை ஏனைய உத்தியோகபூர்வ வழிமுறைகள் மூலம் கண்டறிவதற்கான விசேட கட்டமைப்பு ஒன்றை சபை தயாரித்துள்ளது.
2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரிப் பலன்கள் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் தவறான விபரங்களை வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். நீதவான் நீதிமன்ற விசாரணையின் மூலம் இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓராண்டுக்கு மிகாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, வரும் மே 31ஆம் திகதிக்கு முன்னர் உங்கள் வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு உண்மை மற்றும் துல்லியமான தகவல்களை மட்டுமே வழங்கி முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




