மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்றைய தினம் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்ட இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பொது நூலகத்தை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட நிகழ்வில் ஜனாதிபதி முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டார். மத்திய மற்றும் மாகாண அரசுகளின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், நவீன வசதிகளுடன் கூடிய மூன்று மாடிக் கட்டிடமாக இந்த வாசிகசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்ணசேகர, அமைச்சர்களான சுனில் ஹந்துன்நெத்தி, ஆனந்த விஜயபால மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பல உயரதிகாரிகளும் அரசியல் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் மாநகர முதல்வரினால் ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், ஜனாதிபதியினால் நூலக வளாகத்தில் பயன்தரும் மரக்கன்று ஒன்றும் நட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




