ஹட்டன் டிக்கோயா நகரில் கணவன் மற்றும் மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, அவரிடமிருந்த 18 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபரை வரும் ஜூன் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (24) ஹட்டன் மாவட்ட நீதிபதியும் நீதவானுமான பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஹாலிஎல, தெமோதரை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய, ஒரு பிள்ளையின் தந்தையான ‘செல்லையா மனோஜ்’ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி இந்த கொடூர இரட்டைக் கொலையைச் செய்துவிட்டு தப்பிச் சென்ற இவர், பொகவந்தலாவை பெட்ரோஸோ (Pedro) தோட்டத்தில் தலைமறைவாகியிருந்த வேளையில், நேற்று (23) ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை பொலிஸாரால் கூட்டு நடவடிக்கையொன்றின் மூலம் கைது செய்யப்பட்டார்.
- கொலை ஆயுதங்கள்: சந்தேக நபரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பி மற்றும் கூரிய ஆயுதம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
- கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள்: தம்பதியினரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 18 பவுண் எடையுடைய அனைத்து தங்க நகைகளும் ஹட்டன் பொலிஸாரால் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.




