இலங்கை ரூபாவின் அண்மைக்கால வீழ்ச்சியானது ஒரு புதிய பொருளாதார நெருக்கடியைக் குறிப்பதாகக் கூறப்படும் கூற்றுகளை நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ முற்றாக நிராகரித்துள்ளதுடன், இத்தகைய சித்தரிப்புகள் மக்களை தவறாக வழிநடத்துபவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது நிலவி வரும் மத்திய கிழக்கு மோதல்களினாலேயே இலங்கை பொருளாதாரத்திற்கு இந்த தற்காலிக தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்க டொலரின் மதிப்பில் அண்மையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள், முக்கியமாக உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களுக்கான தேவை அதிகரிப்பு ஆகியவற்றால் உந்தப்பட்டவை என்று அவர் விளக்கினார். இதன் காரணமாக டொலரின் மதிப்பு குறுகிய காலத்திற்குள், அதாவது சுமார் ஒரு வார காலத்திற்கு தற்காலிகமாக உயர்ந்ததாகவும், எனினும் இந்த நிலைமையை திறம்பட கையாள்வதற்கு அதிகாரிகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“ஏற்றுமதி, சுற்றுலாத் துறை மூலமான வருமானம் மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்களின் பணப்பரிமாற்றம் (Remittances) ஆகியவற்றின் ஊடாக இலங்கை தொடர்ந்து போதுமான வெளிநாட்டு நாணய வரவுகளைப் பெற்று வருகின்றது. இது நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத் துறையின் ஸ்திரத்தன்மையைப் பேண பெரிதும் உதவுகிறது.”
எனவே, அண்மைக்கால நாணய மாற்று விகித மாற்றம் என்பது சந்தையின் சாதாரண வழங்கல் மற்றும் தேவை (Supply and Demand Dynamics) அடிப்படையிலான ஒரு தற்காலிக நிகழ்வே தவிர, நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள எந்தவொரு உறுதியற்ற தன்மையோ அல்லது நெருக்கடியோ அல்ல என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.




