நயினாதீவு – குறிகாட்டுவான் இடையிலான புதிய பயணிகள் படகு கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தில்: சீனாவில் இருந்து எஞ்சின் வந்தவுடன் சேவை ஆரம்பம்!
யாழ்ப்பாணம் நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் ஆகிய பகுதிகளுக்கு இடையில் கடற்போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்துவதற்காக, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் (RDA) தயாரிக்கப்பட்டு வரும் புதிய பயணிகள் படகின் கட்டுமானப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
நயினாதீவு நாகதீப விகாரை மற்றும் ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு வருகை தரும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் பிரதேச மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த புதிய நவீன படகு கட்டமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த படகிற்கான பிரதான எஞ்சின் (Engine) சீனாவில் இருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்படவுள்ளது. சீனாவிலிருந்து எஞ்சின் கொண்டு வரப்பட்டு படகில் பொருத்தப்பட்ட பின்னர், இந்த புதிய பயணிகள் படகுச் சேவை உத்தியோகபூர்வமாக மக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பிக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன




