“2029 இல் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாவார்; அவருடன் பேசியே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்போம்” – யாழ். எம்.பி அர்ச்சுனா இராமநாதன் அதிரடி கருத்து!
“நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது சிங்கள இனத்தின் மீது பற்றுக்கொண்டுள்ளார். அவ்வாறான ஒருவரால் மட்டுமே ஏனைய இனங்களையும் ஆதரிக்க முடியும். எனவே, 2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார்” என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கௌரவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவினால் களுத்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“அரசியலுக்கு நான் விரும்பி வரவில்லை. மக்களால் பலவந்தமான முறையில் அரசியலுக்கு தள்ளப்பட்டேன். கடந்த ஒன்றரை வருடகாலமாக பல சவால்களுடன் அரசியலில் ஈடுபடுகிறேன். எனது தந்தை பயங்கரவாதி என்று ஒருதரப்பினர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் எனது தந்தை பொலிஸில் மூன்றாவது பதவி நிலையில் (உயர் அதிகாரி) இருந்தவர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்காக அளப்பரிய சேவையாற்றியுள்ளார். சிங்கள மக்கள் தமது தலைவராக மஹிந்த ராஜபக்ஷவையே பார்க்கிறார்கள். இந்த நாட்டின் ஜனாதிபதியாக நானும் அவரைத் தான் பார்க்கிறேன்.
பல வாக்குறுதிகளைக் குறிப்பிட்டுக் கொண்டு தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது, ஆனால் இன்றுவரை எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. போலியான வாக்குறுதிகளை வழங்கியே ஜனாதிபதி நாட்டு மக்களை ஏமாற்றினார். நாட்டு மக்களுக்கு உண்மையை கூற வேண்டும். முதலில் தனது மனைவி யார் என்பதையும் ஜனாதிபதி நாட்டுக்குக் குறிப்பிட வேண்டும்.
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இந்த அரசாங்கத்துக்கு நிதியளித்தார்கள். ஆனால் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இனிவரும் காலங்களில் இந்த அரசாங்கத்துக்கு நிதியளிக்கக் கூடாது. அவர்கள் இனியும் ஏமாறப் போவதில்லை.
தனது சொந்த இனத்தை ஆதரிக்கும் ஒருவரால் தான் பிறிதொரு இனத்தையும் ஆதரிக்க முடியும். தற்போதைய ஜனாதிபதி உட்பட இந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் தனது சொந்த இனத்தின் மீதே பற்றில்லாதவர்கள். இவர்கள் எவ்வாறு பிறிதொரு இனத்தை ஆதரிப்பார்கள்? நாமல் ராஜபக்ஷ தனது சிங்கள இனத்தின் மீது பற்றுக்கொண்டுள்ளார். ஆகவே அவர் ஏனைய இனங்களையும் ஆதரிப்பார். 2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். அவருடன் பேசி நாங்கள் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைக்குத் தீர்வு காண்போம்” என்றார்.




