உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலே எடுக்கக்கூடிய மிகப்பாரிய மற்றும் மிகப்பொருத்தமான நடவடிக்கை, அவரிடம் உள்ள அனைத்துத் தகவல்களையும் வெளிப்படுத்தி, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே ஆகும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று (16) நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
முன்னாள் உளவுத்துறை மற்றும் இராணுவ அதிகாரி என்ற ரீதியில், தமக்குத் தெரிந்த தகவல்களை மறைத்து வைத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“சூரேஷ் சலே ஒரு உளவுத்துறை மற்றும் இராணுவ அதிகாரி என்ற வகையில் செய்யக்கூடிய சிறந்த காரியம், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து தனக்குத் தெரிந்தவற்றை வெளிப்படுத்தி, பாதுகாப்புப் பிரிவினருக்கு ஆதரவளிப்பதாகும். தகவல்களை மறைத்து வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை” என்று அமைச்சர் கூறினார்.
விசாரணையாளர்களை மாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது எனவும், அதற்குப் பதிலாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) ஒத்துழைப்பு வழங்கி, தேவையான தரவுகளை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்குப் பயன்படுத்தப்படும் நிலையான நடைமுறைகளின்படியே அவர் வைக்கப்பட்டுள்ளாரே தவிர, அவருக்கு எந்தவொரு பிரத்தியேக அறையோ அல்லது சிறப்புச் சலுகைகளோ வழங்கப்படவில்லை என்றார்.
இருப்பினும், அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கவும், குடும்ப உறுப்பினர்கள் அவரைச் சந்தித்து உணவு வழங்கவும் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாகத் தெரிவித்தார். தேவைப்படும் சந்தர்ப்பங்களில் எவ்வித தாமதமும் இன்றி மருத்துவக் கவனிப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

