டாக்கா பிரீமியர் லீக் போட்டிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய வங்காளதேச தேசிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் நயீம் ஹசன் மீது பொலிஸார் நடத்திய கொடூரத் தாக்குதல் தொடர்பில், குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உடனடியாகப் பணியிடை நீக்கம் (Suspended) செய்யப்பட்டுள்ளனர்.
தான் ஒரு தேசிய கிரிக்கெட் வீரர் என்றும், நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுபவர் என்றும் நயீம் ஹசன் பலமுறை கூறியும், அங்கிருந்த பொதுமக்கள் எடுத்துரைத்தும் பொலிஸார் அதனைச் செவிமடுக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. பொலிஸார் அவரைத் தடிகளாலும் பிளாஸ்டிக் குழாய்களாலும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அத்துடன் பொலிஸ் வாகனத்தைப் பயன்படுத்தாமல் மற்றொரு சிஎன்ஜி (CNG) வாகனத்தில் ஏற்றி அவரை ‘குல்ஷி’ (Khulshi) பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சென்ற பின்னரும், உயர் அதிகாரி ஒருவர் தன்னை ‘கண்களைக் கீழே பார்த்துப் பேசுமாறு’ மிரட்டியதாக நயீம் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சிட்டகாங் மாநகர பொலிஸ் கமிஷனர் ஹசன் முகமது சவ்காத் அலி, பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரரின் வீட்டிற்கு நேரில் சென்று தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். அத்துடன், முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஷபிகுல் இஸ்லாம் மற்றும் ரசல் சௌத்ரி ஆகிய இருவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்துள்ளார். இது குறித்து ஆராய 3 பேர் கொண்ட விசேட விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
நயீம் ஹசனுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை வங்காளதேச கிரிக்கெட் சபை (BCB) மற்றும் அதன் தலைவர் தமீம் இக்பால் ஆகியோர் வன்மையாகக் கண்டித்துள்ளனர். அத்துடன் முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், தஸ்கின் அகமது போன்ற சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்கள், “ஒரு தேசிய வீரருக்கு இந்த நிலைமை ஏற்பட்டது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் வெட்கக்கேடானது” என சமூக வலைத்தளங்களில் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.




