பெருந்தோட்டப் பாடசாலைகளின் காணி உரிமைகள் மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்திகள் தொடர்பாக, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஏற்பாட்டில் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று (09) நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய, அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன மற்றும் தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோரின் தலைமைகளில் இக்கலந்துரையாடல் மிகச் சுமுகமாக முன்னெடுக்கப்பட்டது.
ஆராயப்பட்ட முக்கிய கோரிக்கைகளும் தீர்மானங்களும்:
- தோட்டப் பகுதிகளில் இயங்கி வரும் பாடசாலைகள் ஒவ்வொன்றுக்கும் விளையாட்டு மைதானம் மற்றும் உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்காகக் குறைந்தபட்சம் 2 ஏக்கர் காணியைச் சட்டபூர்வமாக ஒதுக்குவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
- பெருந்தோட்டப் பகுதிகளைக் கொண்ட அனைத்து மாவட்டங்களிலும் விஞ்ஞான ஆய்வகம் (Science Lab), கணினிக் கூடம் (IT Lab), நூலகம் மற்றும் விளையாட்டுப் பிரிவுகளை உள்ளடக்கிய முழுமையான வசதிகளுடன் கூடிய தமிழ் மொழிமூல ‘1AB மாதிரி பாடசாலைகளை’ (1AB Model Schools) உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டது.
- நிலச்சரிவு மற்றும் பேரிடர்களினால் பாதிக்கப்பட்ட தோட்டப் பாடசாலைகளுக்கு உடனடித் தற்காலிகக் கட்டடங்கள் மற்றும் நிரந்தரக் கட்டட நிர்மாணத் தீர்வுகளை விரைவாக வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இக்கோரிக்கைகளை உன்னிப்பாகக் கேட்டறிந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, மலையகப் பெருந்தோட்டப் பிராந்தியங்களின் கல்வி அபிவிருத்திக்குத் தற்போதைய அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என உறுதியளித்தார். அத்துடன், முன்வைக்கப்பட்ட இத்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்குக் கல்வி அமைச்சு ஊடாக உடனடியாகத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வித்துறை அதிகாரிகள், கல்வியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டு தமது ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




