சொகுசு காரில் ‘மருத்துவ இலச்சினை’.. இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி 6 கோடி ரூபா மோசடி: ஹொரணையில் போலி பெண் மருத்துவர் அதிரடிக் கைது!
மேற்கத்திய மற்றும் ஆயுர்வேத பெண் மருத்துவர் எனப் போலியாக நடித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களையும் மதகுருமார்களையும் ஏமாற்றி சுமார் 6 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த சட்டவிரோத போலி பெண் மருத்துவர் ஒருவர் ஹொரணை பிராந்திய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிரிபாவ பகுதியைச் சேர்ந்தவராவார். இவர் நீண்டகாலமாக ஹொரணை பகுதியில் உள்ள வீட்டுத் தொகுதி ஒன்றில் வசித்து வந்த 53 வயதுடைய பெண் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணைகளின்படி, சந்தேகநபர் நீண்ட காலமாக இந்த மோசடிப் பின்னணியை மிகவும் திட்டமிட்டு நடத்தி வந்துள்ளார். நுகர்வோரையும் நோயாளிகளையும் நம்ப வைப்பதற்காக, வாடகைக்குச் சொகுசு மோட்டார் வாகனங்களைப் பெற்று, அவற்றில் ‘மருத்துவ இலச்சினையை’ (Doctor Logo) காட்சிப்படுத்தி பல்வேறு கிராமப்புறப் பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார்.
அத்துடன், பல்வேறு தீராத நோய்களுக்கான சிறப்பு மருந்துகளைத் தான் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதாகக் கூறி நோயாளிகளின் பலத்த நம்பிக்கையைப் பெற்றுள்ளார். எனினும், அவர் நோயாளிகளுக்கு வழங்கிய மருந்துகள் இலங்கையில் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படாத, தரம் குறைந்த நச்சுத்தன்மையுடைய மருந்துகள் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தான் ஓடர் செய்த மருந்து கொள்கலன்கள் (Containers) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும், அவற்றை வரி செலுத்தி விடுவிப்பதற்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகவும் சந்தேகநபர் கூறியுள்ளார். துறைமுகத்திலிருந்து மருந்துகளை எடுத்தவுடன் பணத்தை மீண்டும் வட்டியுடன் திருப்பித் தருவதாகக் கூறி, கடந்த ஒன்றரை வருட காலமாகப் பல்வேறு நபர்களிடமிருந்து சுமார் 6 கோடி ரூபா பணத்தை இவர் நூதனமாக மோசடி செய்துள்ளார்.
இவரது மாய வலையில் விழுந்து கம்பஹா, மதுராவல, மில்லனிய, பண்டாரகம, ஹொரணை மற்றும் இங்குரிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சாதாரண பொதுமக்கள் மட்டுமன்றி, அப்பகுதிகளில் உள்ள பிரபல விகாரைகளில் வசிக்கும் மதிக்கத்தக்க தலைமை மதகுருமார்களும் (நாயக்க தேரர்கள்) ஏமாற்றப்பட்டுப் பெருந்தொகை பணத்தை இழந்துள்ளதாகப் பொலிஸாருக்குப் புகார்கள் குவிந்துள்ளன.
இவரது அசாத்திய மருத்துவத் தகைமைகள் குறித்துச் சந்தேகமடைந்த பொலிஸார், இலங்கை மருத்துவச் சபை (SLMC) மற்றும் ஆயுர்வேத மருத்துவச் சபை ஆகியவற்றில் உத்தியோகபூர்வ விசாரணைகளை நடத்தியுள்ளனர். அதன் போது, அவர் எந்தவொரு மருத்துவச் சபையிலும் பதிவு செய்யப்படாத, போலி மருத்துவர் என்பது முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது மோசடி செய்யப்பட்ட கோடிக்கணக்கான பணத்திற்கு என்ன நடந்தது என்பது இதுவரை முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. எனினும் சந்தேகநபரின் பெயரில் இரண்டு போலி நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதைப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அந்தப் போலி நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி, மோசடி செய்த பணத்தை கறுப்புச் சந்தையில் டொலர்களாக (Dollars) மாற்றி, வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வது போல் நடித்து நாட்டிலிருந்து கடத்தியுள்ளாரா என்பது குறித்துப் பொலிஸார் பரந்தளவிலான சர்வதேச விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஹொரணை பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம். ஏக்கநாயக்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், ஹொரணை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தம்மிக நவரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக அதிரடி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



