19ஆவது இந்தியன் பிரிமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரின் சாம்பியனாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி மீண்டும் மகுடம் சூடியுள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் பெங்களூரு அணி ஐபிஎல் கிண்ணத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இன்று (31) நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் நாணய சுழற்சியில் (Toss) வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பில் (Fielding) ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, பெங்களூரு அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து குஜராத் அணி 155 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. குஜராத் அணி சார்பில் வொஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி அதிகபட்சமாக 50 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
பின்னர் 156 என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 18 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து இலக்கை எட்டி அமோக வெற்றி பெற்றது.
பெங்களூரு அணியின் வெற்றிக்காகத் தூணாக விளங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காது 75 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.



