இலங்கையின் 78-வது சுதந்திர தினத்தை கறுப்பு நாடாகப் பிரகடனப்படுத்தி, மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து இன்று (04) பாரிய எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து காந்தி பூங்கா நோக்கி ஊர்வலமாகச் செல்ல போராட்டக்காரர்கள் முற்பட்டபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெருமளவான பொலிஸார் தடைகளை ஏற்படுத்தினர்.
- காந்தி பூங்கா தடை: காந்தி பூங்காவில் உத்தியோகபூர்வ சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறுவதால் அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
- வீதி மறிப்பு: கல்லடிப் பாலத்திலிருந்து திருகோணமலை வீதி ஊடாக நகருக்குள் நுழைய முயன்றபோது, வெள்ளைப் பாலம் அருகில் பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி போராட்டக்காரர்களை வழிமறித்தனர்.
நகரப் பகுதி ஊடாகவே பேரணியைச் முன்னெடுப்போம் என போராட்டக்காரர்கள் பிடிவாதமாக இருந்த நிலையில், பொலிஸாருக்கும் அவர்களுக்கும் இடையே கடும் தர்க்கமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இறுதியில், நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், வெள்ளைப் பாலத்திற்கு அருகிலேயே போராட்டம் மட்டுப்படுத்தப்பட்டு அங்கு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தின் நிறைவில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் விசேட பிரகடனம் ஒன்று வாசிக்கப்பட்டது. தமக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்றும், தொடர்ச்சியான ஏமாற்றங்களே மிஞ்சுவதாகவும் போராட்டக்காரர்கள் இதன்போது விசனம் தெரிவித்தனர்


