ஐக்கிய அமெரிக்க குடியரசின் நாடாளுமன்ற விசேட தூதுக்குழுவினருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்று (10) நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்குச் சொந்தமான ‘ஹவுஸ் டெமோக்ரசி பார்ட்னர்ஷிப்’ (House Democracy Partnership – HDP) தூதுக்குழுவினர் இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகப்பூர்வ விஜயத்தின் ஒரு கட்டமாகவே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்: இச்சந்திப்பின் போது இரு தரப்பினருக்கும் இடையேயான நாடாளுமன்ற ஒத்துழைப்பு, ஜனநாயக ஆட்சி முறைமை, சட்டவாக்க செயல்முறைகள் (Legislative Processes) மற்றும் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீண்டகாலமாக நிலவிவரும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், இலங்கையின் தற்போதைய அரச கொள்கை அபிவிருத்தியாக்கம் மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள சமகால அரசியல், பொருளாதார சவால்கள் தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவருடன் அமெரிக்க பிரதிநிதிகள் ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டனர். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஜனநாயக ஒத்துழைப்பும் பரஸ்பர புரிந்துணர்வும் மேலும் வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது




