செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழுவொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19) செம்மணி பகுதிக்கு நேரில் விஜயம் செய்யவுள்ளது.
குறித்த விசேட குழுவினர் அகழ்வாய்வு தளத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வதற்கு ஏதுவாக, நீதிமன்ற அனுமதியைக் கோரி இன்று செவ்வாய்க்கிழமை (16) யாழ்ப்பாண நீதிமன்றில் அவசர நகர்த்தல் பத்திரம் (Motion) ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், நாளைய தினம் புதன்கிழமை (17) இவ்வழக்கு நீதிமன்றில் அழைக்கப்பட்டு, நீதி அமைச்சரின் குழுவினரை அகழ்வுத் தளத்திற்குள் அனுமதிப்பது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவித்தலை நீதிமன்றம் அறிவிக்கும் எனச் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தலைமையிலான இக்குழுவுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் (OMP) விசேட பிரநிதிகள் குழுவொன்றும் இணைந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய அகழ்வில் அதிர்ச்சி விபரங்கள்: இதேவேளை, செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 26ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று (16) பலத்த பாதுகாப்பு மற்றும் மருத்துவக் குழுவினரின் முன்னிலையில் நடைபெற்றது. இன்றைய அகழ்வுப் பணியின் போது, 2 சிறுவர்களுடையது என சந்தேகிக்கப்படும் உடற்பாகங்கள் உட்பட மேலும் 06 எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் 06 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
விசேட சான்றுப் பொருளாக, இன்றைய தினம் மீட்கப்பட்ட எலும்புக்கூடு ஒன்றின் இடுப்புப் பகுதியில் இருந்து இரண்டு நாணயங்கள் ஒன்றோடொன்று ஒட்டியவாறான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், செம்மணியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, ஒட்டுமொத்தமாக 366 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 357 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



