ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டு! கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்று நண்பகல் அமைதி ஆர்ப்பாட்டம்!
ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவும், இது தொடர்பில் பாரபட்சமற்ற வெளிப்படையான விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் இன்று (16) நண்பகல் கொழும்பில் விசேட அமைதி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சமூக நீதிக் கட்சி, ஏனைய சிவில் அமைப்புகள் மற்றும் நாட்டின் முன்னணி சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இந்த அமைதிப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் அர்க்கம் முனீர் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பிரபல மனித உரிமைச் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலர் பெருந்திரளாகக் கலந்து கொண்டிருந்தனர்.
முஸ்லிம் சமூகத்தின் பூரண ஆதரவு: இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கருத்துத் தெரிவித்த ஏற்பாட்டாளர்கள், ஈஸ்டர் தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவி கத்தோலிக்க மக்களின் உறவுகளுக்குத் தங்களது பூரண ஆதரவும் அநுதாபமும் என்றும் இருக்கும் எனத் தெரிவித்தனர். அத்துடன், இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கான சட்டப் போராட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் விசாரணைகளுக்குப் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் முழுமையான ஆதரவு எப்போதும் உண்டு என்றும் அவர்கள் இங்கு பலமாக வலியுறுத்திக் கூறினர்.



