களுத்துறை தெற்கு பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சந்தேகநபர்கள் பயணித்ததாகக் கருதப்படும் மேலும் ஒரு வாகனம், களுத்துறை – மத்துகம வீதியின் தொடங்கொட பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் வெள்ளை நிற சிறிய ரக வேன் (Van) ஒன்றே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை களுத்துறை, வெட்டுமகடை பகுதியில் காரில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர், மோட்டார் சைக்கிளில் பயணித்த 38 வயதுடைய உள்ளூர் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து கொடூரமான முறையில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக களுத்துறை தெற்கு பொலிஸாரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் வந்த கார், தெபுவன – நேபட தபால் நிலையத்திற்கு அருகில் கண்ணாடி உடைந்த நிலையில் கைவிடப்பட்டிருந்த போது முதலில் கண்டெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மீட்கப்பட்டுள்ள வெள்ளை நிற வேன், கொலைச் சம்பவத்திற்கு முன்னர் சந்தேகநபர்கள் வந்த வாகனம் என்றும், குறித்த வேனில் இருந்தே துப்பாக்கிதாரிகள் காரொன்றுக்கு மாறியிருக்கலாம் என்றும் பொலிஸார் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கைவிடப்பட்ட இரண்டு வாகனங்களையும் கைப்பற்றியுள்ள பொலிஸார், சிசிடிவி (CCTV) காட்சிகளின் உதவியுடன் துப்பாக்கிதாரிகளை அடையாளம் காணும் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.




