போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இணையவழியில் (Online) தண்டப்பணம் செலுத்தும் போது பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் கையாளுமாறு இலங்கை பொலிஸார் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், பொலிஸ்மா அதிபரின் (IGP) பெயரைப் போலியாகப் பயன்படுத்திச் செயற்பட்டுவரும் சைபர் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டிப் பணம் பறிக்கும் மின்னஞ்சல் வலைவமைப்பு தொடர்பாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) சைபர் பாதுகாப்பு விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிவித்துள்ளது.
மோசடி கும்பலின் தந்திரோபாயம் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்களுக்கு போலியான SMS மற்றும் வட்ஸ்அப் (WhatsApp) செய்திகளை அனுப்பி, அவர்களைத் தவறாக வழிநடத்தி போலியான இணையத்தளங்கள் மூலம் பணம் பறிக்கும் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன.
- போலி குற்றச்சாட்டுகள்: ஓட்டுநர்கள் வீதிகளிலுள்ள CCTV காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறி இச்செய்திகள் அனுப்பப்படுகின்றன.
- அதிகாரப்பூர்வ தோற்றம்: இலங்கை பொலிஸார் இச்செய்திகளை அனுப்பியது போல் தோன்றும் வகையில் பல போலி தொலைபேசி இலக்கங்கள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
- போலி இணையத்தளங்கள்: இச்செய்திகளில் உள்ள போலியான இணையத்தள இணைப்புகள் (Links) மூலம், அபராதம் என்ற பெயரில் ஓட்டுநர்களின் வங்கி விபரங்கள் திருடப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கான பொலிஸாரின் முக்கிய அறிவுறுத்தல்:
உத்தியோகபூர்வமற்ற எவ்வித குறுஞ்செய்திகளையும் (SMS) அல்லது வட்ஸ்அப் லிங்குகளை நம்பி உங்களது தனிப்பட்ட விபரங்களையோ அல்லது பணத்தையோ செலுத்த வேண்டாம் எனவும், சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




