இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ‘ஏ’ பிரிவில் (Sri Lanka Women’s ‘A’ Team) இடம்பிடித்து, சர்வதேச ரீதியில் தடம் பதித்துள்ள மன்னார் மாவட்டம், பேசாலை கிராமத்தைச் சேர்ந்த வீராங்கனை சதீஸ்குமார் சஜிந்தினியை வரவேற்கும் விசேட நிகழ்வு இன்று (28) காலை மன்னார் அரச பஸ் நிலையத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
பேசாலை புனித பற்றிமா மகா வித்தியாலய பாடசாலை நிர்வாகம் மற்றும் அதன் பழைய மாணவர்கள் சங்கம் ஆகியவை ஒன்றிணைந்து இந்த பாராட்டு மற்றும் வரவேற்பு விழாவினை ஏற்பாடு செய்திருந்தன.
மன்னார் அரச பஸ் தரிப்பிடத்திற்கு வருகை தந்த வீராங்கனை சஜிந்தினி மற்றும் வருகை தந்த விருந்தினர்கள் அனைவரும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, மங்கள இசை வாத்தியங்கள் முழங்க, அவர்கள் மன்னார் பஜார் பகுதியினூடாக மாவட்டச் செயலகம் வரை உற்சாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
மாவட்டச் செயலகத்தை ஊர்வலம் வந்தடைந்ததும், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்கள் வீராங்கனை சதீஸ்குமார் சஜிந்தினியை நேரில் பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கி உத்தியோகபூர்வமாகக் கௌரவித்தார். இதனைத் தொடர்ந்து, அவர் தனது சொந்தக் கிராமமான பேசாலைக்கு மக்கள் புடைசூழ அழைத்துச் செல்லப்பட்டார்.
மன்னார் பேசாலை 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் சஜிந்தினி, பேசாலை புனித பற்றிமா மகா வித்தியாலயத்தின் மிகச்சிறந்த பழைய மாணவியாவார். தனது திறமையால் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்த அவர், சமீபத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து ‘ஏ’ மகளிர் அணிகளுக்கு இடையிலான சர்வதேசப் போட்டியிலும் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




