2029 ஆம் ஆண்டில் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக நாமல் ராஜபக்சவே அதிகாரத்துக்கு வரக்கூடும் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் வலியுறுத்தியுள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்த அதிரடி அரசியல் கணிப்பை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய போக்கின் மீதான பொதுமக்களின் அதிருப்தியானது, ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர வாக்காளர்களைத் தூண்டக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய, 2029 இல் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீண்டும் நாட்டின் உச்ச அதிகாரத்திற்கு வருவார் என ராமநாதன் அர்ச்சுனா கணித்துள்ளார்.
“இதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். 2029-இல் நாமல் ராஜபக்ச வருவார். அதை யாராலும் தடுக்க முடியாது. நாமல் ஆட்சிக்கு வர வேண்டும் என்று எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்தவொரு விருப்பமும் இல்லை. ஆனால், நாடு இருக்கும் தற்போதைய நிலையைப் பார்த்தால், மக்கள் ராஜபக்சக்களிடமே மீண்டும் அதிகாரத்தை ஒப்படைப்பார்கள்.”
மேலும், நாமல் ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக வருவதற்குப் பொருத்தமானவரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நாமல் ராஜபக்சவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி தேவையில்லை என்றும், அவர் நேரடியாக ஜனாதிபதியாகவே வருவார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்தத் தருணத்தில் தான் அரசியலில் இருக்கப் போவதில்லை என்றும், ஆனால் மக்கள் இதனை நேரில் காண்பார்கள் என்றும் அர்ச்சுனா ராமநாதன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.




