கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று 19 மணித்தியாலங்களுக்கு அவசர நீர்வெட்டு: நீரைச் சேமித்து வைக்குமாறு சபை வேண்டுகோள்!
கம்பஹா மாவட்டத்தின் பல பிரதான பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை (16) காலை முதல் 19 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் முழுமையாகத் தடைப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அவசர அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அத்தனகல்ல, கரஸ்னாகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய மற்றும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர் விநியோகத் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நீர்வெட்டானது இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகி, நாளை புதன்கிழமை (17) அதிகாலை 3.00 மணி வரை அமுலில் இருக்கும் எனச் சபை குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் நீர் விநியோகம் தடைப்படும் பிரதான பிரதேசங்களின் விபரங்கள் பின்வருமாறு:
மினுவாங்கொட மற்றும் கம்பஹா சுற்றுவட்டாரம்: மினுவாங்கொட, அஸ்கிரிய, உடுகம்பொல, ஓபாத, கம்பஹா மாநகர சபை பகுதி, கம்பஹா பிரதேச சபை பகுதி, வெலிவேரிய, பெலும்மஹர, ரதுபஸ்வல மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்.
மஹர மற்றும் அத்தனகல்ல சுற்றுவட்டாரம்: மஹரகம, சிவரலுமுல்ல, கிரிகித்த, கினிகம, அடிகெஹல்கல்ல, ரன்பொகுணகம வீட்டுத் திட்டம், உராபொல, அத்தனகல்ல, படலீய, வத்துபிடிவல மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்.
நிட்டம்புவ சுற்றுவட்டாரம்: நிட்டம்புவ, வெயங்கொட, கலகெடிஹேன, திஹாரிய மற்றும் நைவால.
இக்குறிப்பிட்ட காலப்பகுதியில் நீர் விநியோகத் தடையினால் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்த்துக்கொள்ளும் பொருட்டு, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான நீரினை முன்கூட்டியே தகுந்த முறையில் சேமித்து வைத்துக் கொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மிக அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.



