நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் முற்றிலும் கட்டுக்குள் வந்தது! கைதிகள் குழுக்கள் சமரசத்திற்கு கொண்டுவரப்பட்டதாக ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க அறிவிப்பு!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே இன்று மதியம் ஏற்பட்ட வன்முறை மற்றும் பதற்ற நிலைமை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சிறைச்சாலைகளின் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க இதுகுறித்து உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கையில், மோதலில் ஈடுபட்ட இரு கைதிகள் குழுக்களுக்கிடையேயும் சமரசம் ஏற்படுத்தப்பட்டு, தற்போது சிறைச்சாலையின் உள்ளக நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக போதைப்பொருள் விவகாரம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த பயங்கர மோதலைத் தொடர்ந்து, சிறைச்சாலைக்குள் பெரும் பதற்றம் நிலவியது. நிலைமையைக் சீர்செய்வதற்காகப் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) அவசரமாக அழைக்கப்பட்டிருந்தனர்.
தற்போது வன்முறைகள் தணிக்கப்பட்டு, சிறைச்சாலை வளாகத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.




