அரசாங்கம் தொழிலதிபர்களையும், தன்னை ஆட்சியில் அமர்த்தியவர்களையும் ஏமாற்றிவிட்டது! சர்வஜன பலய தலைவர் திலீத் ஜயவீர அதிரடி குற்றச்சாட்டு!
தற்போதைய அரசாங்கம் தனக்கு ஆதரவளித்த குழுக்களையும், நாட்டின் தொழில்முனைவோரையும் தவறான வழியில் வழிநடத்தி ஏமாற்றி வருவதாகச் சர்வஜன பலய (Sarvajana Balaya) அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திலீத் ஜயவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே பகுதியில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.
அரசாங்கம் உறுதியளித்த பாரிய மாற்றங்களை நம்பியே பெருமளவிலான வாக்காளர்கள் தற்போதைய ஆட்சிக்கு பலத்த ஆதரவை வழங்கியதாக எம்பி திலீத் ஜயவீர சுட்டிக்காட்டினார். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதாகப் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும், தற்போதைய சூழ்நிலையில் தொழிலதிபர்கள் இன்னும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், வெற்றிகரமாக இயங்கி வரும் சில உள்ளூர் வணிகங்களுக்கு எதிராகச் சில உள்ளூர் அதிகாரிகள் தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இது முற்றிலும் நேர்மையற்ற செயல் என்றும் அவர் இங்கு காட்டம் தெரிவித்தார்




