நெடுந்தீவு மக்களின் நீண்டகாலக் கனவு நனவாகிறது! ரூ.40 மில்லியன் செலவில் நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க அடிக்கல் நாட்டினார்!
யாழ்ப்பாணம் நெடுந்தீவு மக்களின் நீண்டகாலத் தேவையை நிறைவு செய்யும் வகையில், 40 மில்லியன் ரூபாய் செலவில் நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா மிகச் சிறப்பாக அரங்கேறியுள்ளது.
“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தொனிப்பொருளின் கீழ், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நெடுந்தீவில் பல்வேறு உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது அதிவேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் தோழர் பிமல் ரத்நாயக்க அவர்கள் கலந்துகொண்டு, இந்த நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் மாவெலி – பெரியதுறை வீதியின் புனரமைப்புப் பணிகளுக்கும் உத்தியோகபூர்வமாக அடிக்கல் நாட்டி வைத்தார். அத்துடன், புதிய வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றை அதன் பயனாளிகளிடம் அவர் நேரடியாகக் கையளித்தார்.
இந்நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கருணைநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
தீவகப் பகுதி மக்களின் போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரச் சவால்களுக்கு நிலையான தீர்வுகளை வழங்கும் நோக்கில் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




