இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை! 500 ட்ரோன்களின் பிரம்மாண்ட ஒளிக்காட்சியுடன் கொழும்பு SSC மைதானத்தில் அரங்கேறும் எல்பிஎல் (LPL 2026) தொடக்க விழா!
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்ட காட்சிக்களிப்பை வழங்கும் வகையில், 2026 லங்கா பிறீமியர் லீக் (LPL) தொடரின் 6ஆவது அத்தியாயத்தின் தொடக்க விழா கொழும்பு எஸ்எஸ்சி (SSC) மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக அரங்கேறவுள்ளது.
இத்தொடரின் உரிமத்தைப் பெற்றுள்ள ஐபிஜி (IPG) நிறுவனம், இலங்கை கிரிக்கெட் வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில், சுமார் 500 ஒருங்கிணைக்கப்பட்ட ட்ரோன்களைக் கொண்டு (Drone Show) இரவு வானை அலங்கரிக்கத் திட்டமிட்டுள்ளது. போட்டி ஒன்றின் தொடக்க விழாவிற்காக இலங்கையில் இவ்வளவு பெரிய நேரடிப் பொழுதுபோக்கு மற்றும் வான்வெளி ஒளிக்காட்சி நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். இது இலங்கை கிரிக்கெட்டின் பெருமை மற்றும் பங்கேற்கும் அணிகளின் பலத்தைப் பறைசாற்றும் வகையில் அமையவுள்ளது.
இம்முறை எல்பிஎல் தொடருக்கான நுழைவுச் சீட்டுகளை (Tickets) ஜூலை முதலாம் திகதி முதல் ‘BookMyShow’ இணையதளம் அல்லது செயலி (App) ஊடாக ரசிகர்கள் கொள்வனவு செய்ய முடியும். விறுவிறுப்பான டி20 கிரிக்கெட் போட்டியுடன், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் இணைந்து, சர்வதேச தரத்திலான ஒரு விளையாட்டு திருவிழாவாக இந்தத் தொடக்க விழா அமையவுள்ளது.
எல்பிஎல் தொடக்க விழாவின் திட்டங்கள் குறித்து ஐபிஜி நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவருமான அனில் மோகன் கருத்துத் தெரிவிக்கையில், “எல்பிஎல் என்பது வெறும் கிரிக்கெட் மட்டுமல்ல. அது ரசிகர்களுக்கு எப்போதும் நினைவில் நிற்கக்கூடிய ஒரு அனுபவத்தை வழங்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். 500 ட்ரோன்களின் வான்வெளி காட்சியுடன் சர்வதேச தரத்திலான பிரமாண்ட விளையாட்டு விழாவின் நேரடி உணர்வை வழங்கும் இந்தச் சிறப்பான தொடக்க விழாவைக் காண வருமாறு இலங்கை விளையாட்டு ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.




