இலங்கையில் சமய, சமூக மறுமலர்ச்சி தந்த உன்னத நாள்! நாடளாவிய ரீதியில் இன்று பக்திப்பரவசத்துடன் கொண்டாடப்படும் பொசன் பௌர்ணமி தினம்!
இலங்கையில் பௌத்த தர்மம் நிலைநாட்டப்பட்டதை நினைவுகூரும் உன்னதமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பொசன் பௌர்ணமி தினம் இன்றாகும் (29).
மிஹிந்த தேரர் தலைமையிலான தர்மதூதுக் குழுவினர் இலங்கைக்கு வருகை தந்தது இன்றைய போன்றதொரு வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பௌர்ணமி தினத்திலாகும் என்பதுடன், அன்றிலிருந்து இந்த நாட்டில் பௌத்த மதம் உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டது. அநுராதபுரம் மிஹிந்தலை குன்றுக்கு வருகை தந்த மிஹிந்த தேரர், அப்போது இலங்கையை ஆட்சி செய்த தேவநம்பியதிஸ்ஸ மன்னன் உள்ளிட்ட குழுவினருக்கு பௌத்த மதத்தைப் போதித்து நல்வழிப்படுத்தினார்.
இந்தக் தர்மதூதுக் குழுவினர் இலங்கையில் பௌத்த தர்மத்தை ஸ்தாபித்ததை அடுத்து நாட்டின் சமய, சமூக மற்றும் கலாசார ரீதியில் ஒரு பாரிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, 18 கலைகளில் நிபுணத்துவம் பெற்ற சங்கமித்தை உள்ளிட்ட குழுவினர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்ததை அடுத்து, மேலும் பல சாதகமான மாற்றங்கள் நாட்டில் ஏற்பட்டன. இதன் விளைவாக, இலங்கையில் பௌத்த தர்மத்துடன் தொடர்புடைய கலாசாரமும், நீர்ப்பாசனக் கட்டமைப்பும், விவசாயத்தை மையமாகக் கொண்ட சமூகக் கட்டமைப்பும் மேலும் வலுப்பெற்றன.
இந்த ஆண்டுக்கான தேசிய பொசன் பௌர்ணமி நிகழ்வுகள் வரலாற்றுப் பெருமைமிக்க மிஹிந்தலை புனித பூமியை மையமாகக் கொண்டு பக்திப்பரவசத்துடன் நடைபெறுகின்றன. இதற்கமைய, மிஹிந்தலை புனித பூமியில் அன்னதானங்கள், தர்ம போதனைகள் உள்ளிட்ட பல்வேறு விசேட சமய மற்றும் ஆன்மீக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



