கட்டுநாயக்கவில் சுங்கப்பிரிவு அதிரடி! 200 மில்லியன் ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது!
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகப் பாரியளவிலான போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற கனடா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
விமான நிலைய சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே, சந்தேகத்திற்கிடமான கனேடியப் பயணி சோதனையிடப்பட்டார். இதன்போது, அவரிடமிருந்து சுமார் 20 கிலோகிராம் ‘ஹசீஸ்’ (Hashish) போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் தொகுதியின் தற்போதைய சந்தைப் பெறுமதி 200 மில்லியன் ரூபாய்க்கும் (ரூ. 20 கோடி) அதிகம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் மேலதிக விசாரணைகளைச் சுங்கத் திணைக்களம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.



