நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இடையே கொடூர மோதல்! கவலைக்கிடமாக இருந்த இருவர் உயிரிழப்பு – 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே இன்று (05) ஏற்பட்ட பயங்கர மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கைதிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையில் இந்த மோதல் இன்று மதியம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த மோதலில் மொத்தம் 25 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் தீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமாக இருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மோதலில் காயமடைந்த ஏனைய 23 பேரும் தற்போது நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட இந்த வன்முறையைத் தொடர்ந்து அங்கு பெரும் பதற்ற நிலைமை நிலவியது. இந்நிலையில், சிறைச்சாலை வளாகத்தின் பதற்ற நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கும், பாதுகாப்பு அரணை பலப்படுத்துவதற்கும் பொலிஸாரும் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரும் (STF) தற்போது அங்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.



