நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்பாகும் அபாயம்! மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை!
நீர்கொழும்பு முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான நாட்டின் கடலோரப் பகுதிகளில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் முதல் மன்னார் ஊடாக காங்கேயசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, திருகோணமலை முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேயசன்துறை வரையான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சிலாபம் முதல் மன்னார் ஊடாக காங்கேயசன்துறை வரையான கடற்பரப்புகளும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
மேலும், திருகோணமலை முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேயசன்துறை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் தங்களது பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




