எம்பிலிப்பிட்டியாவில் உள்ள முன்னணி ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இன்று (03) காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 22 தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை தொழிற்சாலை இயங்கிக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்தின் காரணமாக ஏற்பட்ட கடுமையான தீக்காயங்கள் மற்றும் விபத்தின் போது வெளியேறிய நச்சுப்புகையை சுவாசித்தமை காரணமாகவே தொழிலாளர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 15 பேர் முதற்கட்டமாக மீட்கப்பட்ட நிலையில், தற்போது மொத்தம் 22 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்ச பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக செவனகல தீயணைப்புத்துறையிலிருந்து அவசரமாகத் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை அணைக்கும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த திடீர் தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், எம்பிலிப்பிட்டிய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




