ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், ஜப்பானின் விவசாயம், வனவியல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் நெமோட்டோ யுகினோரி (Hon. NEMOTO Yukinori) அவர்களுக்கும் இடையிலான கொள்கை ரீதியிலான விசேட கலந்துரையாடல் நேற்று (02) டோக்கியோ நகரில் அமைந்துள்ள ஜப்பானிய கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில், நீரியல் வளர்ப்பு மற்றும் கடல்வள முகாமைத்துவம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
- இலங்கையின் கடல் உணவு பெறுமதி சங்கிலியை (Seafood Value Chain) மேம்படுத்துதல் மற்றும் ஜப்பானிடமிருந்து தேவையான தொழில்நுட்ப ஆதரவைப் பெற்றுக்கொள்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
- ஜப்பானிய சந்தையில் இலங்கையின் கடல் உணவுகளுக்கான தேவையை மேலும் அதிகரிப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
- இலங்கையின் கடற்றொழில் துறைக்கு நவீன தொழில்நுட்பத்தை வழங்கி, உலகளாவிய தரத்திற்கு ஏற்ப மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இலங்கைப் பல்கலைக்கழகங்களின் மீன்வளம், கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பீடங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரி இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பானின் மீன்பிடி தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளமை இந்தக் கலந்துரையாடலின் குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.
இணையுங்கள் →Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இந்தத் திட்டத்தை எதிர்காலத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை சார்ந்த பிரிவுகள் மற்றும் தூதரகம் ஊடாக ஒருங்கிணைத்து, விரைவாகச் செயல்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இதன்போது தீர்மானம் மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவித்துரு ஜனக குமாரசிங்க மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே.கோலித கமல் ஜினதாச ஆகியோரும் கலந்துகொண்டனர்.




