டித்வா சூறாவளி மறுசீரமைப்பு பணிகளுக்கு 200 மில்லியன் டொலர் அவசரகால உதவி! ஆசிய அபிவிருத்தி வங்கி அதிரடி நிதியுதவி!
கடந்த வருட இறுதியில் நாட்டை உலுக்கிய ‘டித்வா சூறாவளி’ பேரழிவின் பின்னரான மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 200 மில்லியன் அமெரிக்க டொலர் அவசரகால உதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இந்த அவசர உதவிப்பொதியில் 100 மில்லியன் டொலர் கடன் தொகையும், மற்றுமொரு 100 மில்லியன் டொலர் சலுகை கடன் தொகையும் (Concessionary Loan) உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மறுசீரமைப்புத் திட்டங்களைச் மிகச் சரியான முறையில் செயற்படுத்துவதற்கும், அதன் தரத்தை சர்வதேச மட்டத்தில் உறுதிப்படுத்துவதற்கும் என தனியாக 05 இலட்சம் (500,000) அமெரிக்க டொலர் தொழில்நுட்ப உதவி மானியமும் (Technical Assistance Grant) இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த அவசர உதவிப்பொதி பிரதானமாகப் பின்வரும் முக்கிய பணிகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது:
- சூறாவளியால் சேதமடைந்த வீதிகள் மற்றும் நீர்ப்பாசன உட்கட்டமைப்புகளை (Irrigation Infrastructure) மறுசீரமைத்தல்.
- கடுமையாகப் பாதிக்கப்பட்ட சிறு தோட்ட உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புதல்.
- முற்றாக அழிவடைந்த அல்லது சேதமடைந்த வீடுகளைப் புனரமைக்கப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளித்தல்.
போக்குவரத்து, நீர்ப்பாசனம், விவசாயம் மற்றும் இடர் முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான இலங்கையின் அரச நிறுவனங்கள் ஊடாக இந்த திட்டங்கள் நேரடியாகச் செயற்படுத்தப்படவுள்ளன. அத்துடன், இப்பணிகளின் வெளிப்படைத்தன்மையைப் பேண ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்ட ஆலோசகர்களின் (Project Consultants) நேரடி ஆதரவும் கண்காணிப்பும் கிடைக்கப் பெறும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




