முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! தற்கொலை என சந்தேகம்!
இலங்கை பொலிஸ் சேவையின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவர் தமக்குத் தாமே துப்பாக்கிச் சூட்டை ஏற்படுத்தி தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த 1986ஆம் ஆண்டு உதவி பயிற்சி பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் சேவையில் இணைந்துகொண்ட சி.டி. விக்ரமரத்ன, 34 வருடங்களுக்கும் அதிக காலம் பொலிஸ் சேவையில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருந்தார்.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து, அப்போதைய பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பட்டார். அதனையடுத்து, பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார்.
அதன்பின்னர் ஒரு வருடமும் 7 மாதங்களும் பதில் பொலிஸ் மா அதிபர் பதவியை வகித்து வந்த அவர், பின்னர் இலங்கையின் 35 வது பொலிஸ் மா அதிபராக உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.
நீண்ட காலம் பொலிஸ் துறையில் பல்வேறு பதவிகளை வகித்த சி.டி. விக்ரமரத்ன, கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதியுடன் தமது கடமைகளில் இருந்து உத்தியோகப்பூர்வமாக ஓய்வுப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது இந்த திடீர் மரணம் பொலிஸ் திணைக்களத்தினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.




