சர்வதேச கடல் வர்த்தகம் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தின் பிரதான நுழைவாயிலாகக் கருதப்படும் ‘ஹோர்முஸ் நீரிணை’ (Strait of Hormuz) அனைத்து வகையான கடல் போக்குவரத்திற்காகவும் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக ஈரான் இராணுவத் தலைமையகம் இன்று (11) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க இராணுவம் அண்மையில் ஈரானின் தெற்கு மாகாணமான ஹொர்மொஸ்கான் (Hormozgan) உள்ளிட்ட பல பகுதிகள் மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே ஈரானின் ‘காதம் அல்-அன்பியா’ (Khatam al-Anbiya) மத்திய இராணுவத் தலைமையகம் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இந்த அதிரடித் தீர்மானத்தை எடுத்துள்ளன.
“பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக, இந்த நொடி முதல் ஹோர்முஸ் நீரிணையானது எரிபொருள் விநியோகக் கப்பல்கள் (Oil Tankers) மற்றும் வர்த்தகக் கப்பல்கள் (Commercial Vessels) உட்பட அனைத்து வகையான கடல் போக்குவரத்திற்கும் முழுமையாக மூடப்பட்டு தடைசெய்யப்பட்ட வலயமாக அறிவிக்கப்படுகிறது. இந்த தடையை மீறி நீரிணை ஊடாகப் பயணிக்க முற்படும் எந்தவொரு கப்பல் மீதும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும்” என ஈரான் பாதுகாப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.
ஏற்கனவே ஹோர்முஸ் நீரிணையை சட்டவிரோதமாகக் கடக்க முயன்ற இரண்டு கலம் மீதான தாக்குதல்களைத் தாங்கள் வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகப் பொருளாதாரத்தின் உறைவிடமாகக் கருதப்படும் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு (20%) இந்த ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. ஈரானின் இந்த திடீர் அறிவிப்பை அடுத்து, சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை பேரல் ஒன்றுக்கு உடனடியாக 2 டாலருக்கும் அதிகமாக உயர்ந்து 95.40 டாலரை எட்டியுள்ளது. இது உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் கடுமையான விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஈரானின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் (US CENTCOM) விடுத்துள்ள தற்காலிக மறுப்பு அறிக்கையில், ஹோர்முஸ் நீரிணை இன்னும் திறந்தே இருப்பதாகவும், வர்த்தகக் கப்பல்கள் தொடர்ந்து பயணிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. எனினும், ஈரானின் நேரடி அச்சுறுத்தல் காரணமாக 150 க்கும் மேற்பட்ட சர்வதேசக் கப்பல்கள் ஓமான் மற்றும் பாரசீக வளைகுடா கடற்பரப்பில் அவசரமாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கடல்சார் அமைப்புகள் (IMO) உறுதிப்படுத்தியுள்ளன.




