யாழ்ப்பாணத்தில் “வயலின் வித்துவான் லக்ஷமிநாராயண வீதி” உத்தியோகபூர்வமாகத் திறப்பு! இந்திய – இலங்கை முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு!
உலகப் புகழ்பெற்ற வயலின் வித்துவான் கலாநிதி எல். சுப்பிரமணியம் அவர்களின் தந்தையாரான பேராசிரியர் வி. லக்ஷமிநாராயணனை நினைவுகூரும் வகையில், யாழ்ப்பாணம் உடுவில் இராமநாதன் கல்லூரிக்கு அருகாமையிலுள்ள வீதி “வயலின் வித்துவான் லக்ஷமிநாராயண வீதி” என நேற்று (23) காலை உத்தியோகபூர்வமாகப் பெயரிடப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது.
புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தலைமையில் இந்நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இந்தியக் கலைஞர்கள் மற்றும் அரச பிரதிநிதிகள் பங்கேற்பு: இந்நிகழ்வில் உலகப் புகழ்பெற்ற வயலின் வித்துவான் கலாநிதி எல். சுப்பிரமணியம், இந்தியாவின் பிரபல பாடகி கவிதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட இந்தியப் பிரதிநிதிகள் குழுவினர் மற்றும் இந்தியத் துணைத் தூதர் ஆகியோர் விசேட அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
முக்கிய அதிகாரிகள் வருகை: மேலும், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதாநாயகன், யாழ். மாவட்டச் செயலாளர் எம். பிரதீபன், தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் செனரத் விக்கிரமசிங்க மற்றும் இலங்கை கலைக் கழகத் தலைவர் கீர்த்தி வெலிசரகே உள்ளிட்ட பல அரச அதிகாரிகளும், நாட்டின் முன்னணி கலைஞர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பேராசிரியர் வி. லக்ஷமிநாராயணனின் இசைப் பங்களிப்பைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீதிப் பெயர்ப்பலகை, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசார உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்திருப்பதாக நிகழ்வில் உரையாற்றிய பிரமுகர்கள் சுட்டிக்காட்டினர்.




