டெங்கு அபாயம் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் 2 வாரங்களுக்கு அவசரமாக மூடல்! விரிவுரைகள் இணையவழியில் தொடரும் என நிர்வாகம் அறிவிப்பு!
டெங்கு நோய் பரவல் அபாயம் காரணமாக, மொறட்டுவை பல்கலைக்கழகத்தை நேற்று (06) முதல் இரண்டு வார காலத்திற்குத் தற்காலிகமாக மூடுவதற்குப் பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் முக்கிய கல்விப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சில மாணவர்கள் அந்தப் பரீட்சைகளில் கலந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்கலைக்கழக வளாகத்தினுள் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ளதை அடுத்தே, மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி பல்கலைக்கழகத்தைத் தற்காலிகமாக மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
பல்கலைக்கழக வளாகம் மூடப்பட்டிருந்தாலும், மாணவர்களுக்கான கல்விப் பாதிப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் விரிவுரைகள் அனைத்தும் இணையவழியில் (Online) தொடர்ந்தும் நடைபெறும் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதன்படி, நேற்று (ஜூலை 06) முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ள மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் நேரடி கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் அனைத்தும் எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இடைப்பட்ட காலத்தில் பல்கலைக்கழக வளாகத்தினுள் டெங்கு நுளம்பு ஒழிப்பு மற்றும் தூய்மைப்படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



