முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச, நிதி குற்றப் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், அவர் பாணந்துறை பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருப்பதாக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்றபோதிலும், அந்த நேரத்தில் சரத் வீரவங்ச அங்கு இருக்கவில்லை.
இருப்பினும், அவர் இன்று (16) கம்பஹாவில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அங்கு சென்று இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.



