சிகரெட்டுக்கு பில்லியன் கணக்கில் வரிச் சலுகை; விவசாய உபகரணங்களுக்கு வரிச் சுமை! அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடினார் சஜித் பிரேமதாச!
அரசாங்கம் விவசாய உபகரணங்களுக்கு மேலும் வரிகளை விதித்துள்ள போதிலும், சிகரெட்டுகளுக்குத் தொடர்ச்சியாக வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை, சூரியவெவ பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று இன்று (15) இடம்பெற்றது. சுனில் கமகேவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை 14 ஆம் திகதி வரை சிகரெட் நிறுவனத்திற்கு 9.2 பில்லியன் இலங்கை ரூபாய் வரிச் சலுகைகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், விவசாயம் செய்வதற்குத் தேவையான விவசாய உபகரணங்களுக்கு அரசாங்கம் இந்த வரிச் சலுகைகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார். சிகரெட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளையும், விவசாய உபகரணங்களுக்கு வரிச் சுமையை மேலும் மேலும் அதிகரிப்பதற்கே இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நெற்செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளைப் பாதுகாப்பதாகக் கூறி, அரசாங்கம் தற்போது நிலையான விலையாக நாட்டு நெல்லுக்கு 120 ரூபாவும், சம்பாவிற்கு 130 ரூபாவும், கீரி சம்பாவிற்கு 140 ரூபாவும் என்ற அடிப்படையில் விலைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது. ஆனால் தேர்தல் காலங்களில் வயல் வெளிகளுக்குள் இறங்கி நெற் கதிர்களைக் கடித்துக் கொண்டு, நெல்லுக்கு 150 ரூபாய் நிலையான விலையை நாட்டின் சட்டமாக மாற்றித் தருவோம் என்று பிரஸ்தாபித்ததை சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
முன்னர் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை எனவும், எமது நாட்டில் சமகாலத்தில் விவசாயம் என்பது நட்டமடையும் ஒரு தொழிலாக மாறியுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கவலை வெளியிட்டுள்ளார்.



