செப்டெம்பர் முதல் அனைத்துப் பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளுக்கும் தரப் பரிசோதனை! வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அதிரடி!
பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனையை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.
இச்செயற்பாட்டை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
: இந்நாட்டின் பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் வாகன விபத்துக்களுக்குச் சாரதிகளின் கவனயீனம் மற்றும் வாகனங்களில் காணப்படும் பல்வேறு இயந்திர மற்றும் தரக் குறைபாடுகளுமே பிரதான காரணங்களாக அமைகின்றன என அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தரப் பரிசோதனைகளுக்காகத் தகுதிவாய்ந்த தொழில்நுட்ப அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்காகத் தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆட்சேர்ப்புகளின் பின்னர் செப்டெம்பர் மாத இறுதிக்குள் இச்செயற்பாட்டை முழுமையாக ஆரம்பிக்க முடியும் எனத் தெரிவித்த தலைவர், அதற்கமைய இந்நாட்டின் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனைகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.




