தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் வன்முறையாக மாறமுன் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தடுத்து நிறுத்த வேண்டும்! யாழ். மாவட்ட கிராமியக் கடற்றொழிலாளர் சங்கம் எச்சரிக்கை!
தமிழக மற்றும் யாழ்ப்பாணக் கடற்றொழிலாளர்களுக்கிடையே முரண்பாடுகள் முற்றி வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர், எல்லைதாண்டி நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள் வரும் தமிழக மீன்பிடியாளர்களின் அத்துமீறல்களைத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தடுத்து நிறுத்த வேண்டும் என யாழ். மாவட்ட கிராமியக் கடற்றொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (21) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை முன்னெடுத்துச் பேசிய அச்சங்கத்தின் பிரதிநிதி செபமாலை அன்ரனி செபராசா இக்கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய அவர், “சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள், குறிப்பு புங்குடுதீவுக் கடற்பகுதிக்குள் அடாவடியாக நுழைந்த இந்திய மீன்பிடியாளர்கள், எமது தொழிலாளர்களின் கோடிக்கணக்கான சொத்துக்களைச் சீரழித்துவிட்டுச் சென்றுள்ளனர். குறிப்பாக, புங்குடுதீவின் கரை வரை வந்து அந்த வெறியாட்டத்தைத் தமிழக மீனவர்கள் அரங்கேற்றிச் சென்றுள்ளனர். இதனை இலங்கைக் கடற்படையினரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்” எனக் குற்றஞ்சாட்டினார்.
கடற்றொழில் அமைச்சரின் செயற்பாடுகளை விமர்சித்த அவர், கடற்றொழில் அமைச்சரும் மீனவர் விடயத்தில் ஒரு நழுவல் போக்குடனேயே தொழிற்படுகின்றார் எனத் தோன்றுகின்றது என்றார். இலங்கைக் கடற்படையைக் கொண்டு இந்தியச் சட்டவிரோத மீன்பிடியாளர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றே தாம் அநுர அரசாங்கத்திடம் கோருவதாகவும், ஆனால் கடற்றொழில் அமைச்சர் இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பேசித் திரிகின்றாரே தவிர, உருப்படியாக எதையும் இதுவரை செய்யவில்லை என்றும் சாடினார். தேர்தல் காலத்தில் கடற்றொழிலாளர்களுக்குக் கொடுத்த வாக்கினை அமைச்சரும் அவர் சார்ந்த தரப்பினரும் மறந்துவிட்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அப்பாவித் தொழிலாளர்களாகிய தாம் ஏமாற்றத்துடன் வாழ்வாதாரத்தையும் இருப்பையும் இழந்து வருவதாகக் கவலை வெளியிட்ட அவர், இதன் உச்சமாக இனிவரும் நாட்களில் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் முற்றி வன்முறையாக மாறுவதற்கான சூழல் உருவாகிக் கொண்டிருக்கின்றது என எச்சரித்தார்.
எனவே, அவ்வாறானதொரு அசாதாரண நிலைமை உருவெடுப்பதற்கு முன்னர், எல்லை தாண்டி நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துவரும் தமிழக மீனவர்களின் நடவடிக்கைகளைத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனச் சங்கம் சார்பில் அவர் கோரிக்கை விடுத்தார்.




