ஆஸியிடம் படுதோல்வி! மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து கண்ணீருடன் வெளியேறியது இந்தியா!
இங்கிலாந்து மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறியுள்ளது.
உலகக்கோப்பை கனவு கலைந்தது: சமீபத்தில் ஒருநாள் உலகக்கோப்பை தொடரை முதல்முறையாக வென்று சாதனை படைத்த ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி, இந்த 2026 டி20 உலகக்கோப்பை தொடரிலும் வென்று இரட்டை சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. இங்கிலாந்து மைதானங்களின் சூழல் இந்தியாவிற்குச் சாதகமாக இருக்காது என்று கூறப்பட்ட நிலையிலும், தொடக்கத்தில் அடுத்தடுத்து 2 போட்டிகளில் அற்புதமான வெற்றிகளைப் பதிவுசெய்து இந்தியா அசத்தியது.
எனினும், முக்கியமான லீக் போட்டியில் மோசமான ஃபீல்டிங் காரணமாகத் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியைத் தழுவியது. இந்தச் சூழலில், அடுத்த சுற்றுக்கு (அரையிறுதிக்கு) தகுதிபெற வேண்டுமானால் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற கட்டாயத்துடன் இந்தியா இன்று களமிறங்கியது.
ஹர்மன்பிரீத்தின் அதிரடி அரைசதம்: இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் அபாரமான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ஹர்மன்பிரீத், 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் வெறும் 27 பந்துகளில் 56 ரன்கள் விளாசி இந்திய அணி ஒரு நல்ல ஸ்கோரை எட்ட உதவினார்.
ஆஸ்திரேலியாவின் அசாத்திய ஆதிக்கம்: இதனையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் முட்டுக்கட்டை போட்டனர். 3 விக்கெட்டுகளைத் வீழ்த்தி இந்தியா ஆட்டத்தை நன்றாகத் தொடங்கினாலும், அதன் பின்னர் 4வது விக்கெட்டுக்குக் கைகோர்த்த எல்லிஸ் பெர்ரி மற்றும் ஆஷ்லே கார்ட்னர் ஜோடி இந்தியப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.
அடுத்தடுத்து அரைசதமடித்த பெர்ரி – கார்ட்னர் கூட்டணி ஆஸ்திரேலியாவின் வெற்றியை எளிதாக உறுதிசெய்தது. இந்த படுதோல்வியின் மூலம் 2026 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




