அமெரிக்காவில் சோதனைப் பயணத்தின் போது பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளானது: போயிங் நிறுவன ஊழியர்கள் உட்பட 8 பணியாளர்களும் பலி!
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸுக்கு வடகிழக்கில் அமைந்துள்ள எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்திலிருந்து (Edwards Air Force Base) நேற்று காலை சோதனைப் பயணத்திற்காகப் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான பி-52 ரக குண்டுவீச்சு விமானம் (B-52 Stratofortress) விபத்துக்குள்ளாகி நொறுங்கியுள்ளது. இந்த விபத்தின் விளைவாக அவ்விமானத்தில் பயணித்த எட்டு பணியாளர்களும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பி-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் விமானம், உள்ளூர் நேரப்படி காலை 11:20 மணிக்கு எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்திலிருந்து சோதனைப் பணியின் நிமித்தம் புறப்பட்ட சொற்ப நேரத்திலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விமானம் விபத்துக்கு உள்ளானதை அடுத்து, அந்த இடத்திற்கு அவசர மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புப் படையினர் உடனடியாக விரைந்தனர். இவ்விபத்தைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் விசாலமான கரும் புகை மண்டலம் எழுந்து காட்சியளித்ததாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
இவ்விமானத்தில் பயணித்த குழுவில் இராணுவ அதிகாரிகள், சிவில் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரச ஒப்பந்தக்காரர்கள் எனப் பலதரப்பட்டோர் இருந்ததாகப் பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த சார்ஜென்ட் ஜோஷுவா டி. ஸ்கார்லோக்கன் தெரிவித்தார்.
இதற்கிடையே, இவ்விமானத்தைத் தயாரித்த உலகப் புகழ்பெற்ற போயிங் (Boeing) நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிக்கையில், விபத்துக்குள்ளான அக்குண்டு வீச்சு விமானத்தில் தங்களது நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களும் பயணித்ததாக உறுதிப்படுத்தியுள்ளதுடன், அவர்களது குடும்பத்தினருடன் தற்சமயம் தொடர்பில் இருப்பதாகவும் ஆழந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது.
ரடார் நவீனமயமாக்கல் திட்டத்திற்கு (Radar Modernization Program) ஆதரவாக அவ்விமானம் மிக முக்கிய சோதனையில் ஈடுபட்டிருந்த சமயம் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க விமானப்படை அதிகாரிகள், விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

