இந்திய விமான நிறுவனங்களுக்கான வான்வெளித் தடையை ஜூலை 24 வரை அதிரடியாக நீடித்தது பாகிஸ்தான்!
இந்திய விமான நிறுவனங்கள் தங்கள் நாட்டு வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்வரும் ஜூலை மாதம் 24ஆம் திகதி வரை நீடித்து பாகிஸ்தான் அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
முன்னதாக, பஹல்காம் பகுதியில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் முகமாக, கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி இந்தியப் பாதுகாப்புப் படைகளால் ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindhoor) என்ற அதிரடி இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான எல்லை மோதல்கள் வெடித்தன. பின்னர், கடந்த ஆண்டு மே 9 அன்று இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு தற்காலிகத் தீர்வு எட்டப்பட்டது.
இருப்பினும், பஹல்காம் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்த பதற்றமான சூழ்நிலை காரணமாகப் பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவின் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய அரசு தடை விதித்தது. இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தானும் தங்கள் நாட்டு வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்துவதற்குக் கடுமையான தடையை விதித்தது.
அன்று முதல் இந்திய விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் இந்தத் தடையானது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போதைய நிலவரப்படி இந்தத் தடையை ஜூலை 24 வரை நீட்டிப்பதாகப் பாகிஸ்தான் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் இந்தத் தொடர் தடை உத்தரவு காரணமாக, மேற்கத்திய நாடுகளுக்குச் செல்லும் இந்தியப் பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களின் பயண நேரமும், எரிபொருள் செலவும் கணிசமாக அதிகரிக்கும் என விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

