3.074 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டு! கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 35 வயது நபருக்கு ஆயுள்தண்டனை விதிப்பு!
3.074 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபரொருவருக்கு அனுராதபுரம் மாகாண மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
கெக்கிராவ, தலாவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கடுமையான தண்டனைத் தீர்ப்பிற்கு உள்ளாகியுள்ளார். சந்தேக நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கு கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கின் இருதரப்பு வாதங்களையும், சாட்சியங்களையும் தீர்க்கமாக ஆராய்ந்த அனுராதபுரம் மாகாண மேல் நீதிமன்ற நீதவான், சந்தேக நபர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இதற்கமைய, சட்டவிரோதமாகப் போதைப்பொருள் வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றங்களுக்காகக் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று அதிரடி உத்தர பிறப்பித்துள்ளது.



