நாட்டில் இனி பொது அவசரகால நிலை நீடிக்கப்படமாட்டாது! அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொது அவசரகால நிலையினை இம்மாதம் (ஜூலை) முதல் மேலும் நீடிக்கப்போவதில்லை என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (1) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விபரத்தை வெளியிட்டார்.
பின்னணி மற்றும் காரணம்: கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட கொடூரமான ‘டித்வா புயல்’ பேரழிவு காரணமாக நாட்டில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் பொது ஒழுங்கினைப் பேணுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய காரணிகளுக்காக நாட்டில் பொது அவசர கால நிலை அமுல்படுத்தப்பட்டிருந்தது.
அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அது பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற அனுமதியுடன் நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது நாட்டின் நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதால், இந்த அவசரகால சட்டத்தை மேலும் நீடிக்கத் தேவையில்லை என அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.




