ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் நவீன அம்புலன்ஸ் வண்டி இனி முல்லைத்தீவு மக்களுக்கு! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அதிரடி நடவடிக்கை!
முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதாரச் சேவை மற்றும் அவசர நோயாளர் போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், மாவட்ட அரச வைத்தியசாலைக்கான அதிநவீன நோயாளர் காவு (ஆம்புலன்ஸ்) வண்டி ஒன்று உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்று (30) சுகாதார அமைச்சின் வளாகத்தில் இந்த நோயாளர் காவு வண்டி முல்லைத்தீவு வைத்தியசாலை அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது. இந்த அம்புலன்ஸ் வண்டியானது உலகத் தரம் வாய்ந்த “நிசான்” (Nissan) வகையைச் சேர்ந்ததாகும்.
முன்னதாக இந்த நவீன அம்புலன்ஸ் வண்டியானது ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிற்காக (Presidential Security Division) ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும், அது சார்ந்த பணிகளுக்காக இந்த வாகனம் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடந்தது. இதனை அவதானித்த ஜனாதிபதி செயலகம், இந்நாட்டின் பொதுச் சுகாதாரச் சேவையின் அவசரத் தேவையைக் கருத்திற் கொண்டு, அதனைச் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்க அதிரடி நடவடிக்கை எடுத்திருந்தது.
இதன்படி, முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்தியசாலையின் நோயாளர் பராமரிப்புச் சேவைகளை வலுப்படுத்தும் வகையில் இந்த அம்புலன்ஸ் வாகனம் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த முக்கிய நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் டாக்டர் குமார விக்கிரமசிங்க, பிரதி பணிப்பாளர் நாயகம் (விநியோகம்/தளவாடங்கள்) எச்.எம்.என். டினிபிரிய ஹேரத், போக்குவரத்துப் பணிப்பாளர் முதித விமலசேன உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.



