சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் காலவகாசம் இன்றுடன் நிறைவு! ஆன்லைன் மூலம் மட்டுமே சாத்தியம் என பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!
கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்காக விண்ணப்பிக்கும் காலவகாசம் இன்றுடன் (08) நிறைவடைவதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்ததுடன், பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரும் இணையவழியாகத் தாமாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. தபால் அல்லது வேறு வழிமுறைகள் ஊடாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இற்குச் சென்று, “Our Services” (எமது சேவைகள்) என்பதன் கீழ் உள்ள “Exam Information Centre” ஐ அழுத்துவதன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.
- ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள்: பரீட்சை இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தைப் பயன்படுத்த வேண்டும்.
- புதிய பயனர்கள்: தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் கைபேசி இலக்கத்தைப் பயன்படுத்திப் புதிதாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன்னர் அதிலுள்ள தொழில்நுட்ப அறிவுறுத்தல்கள், பொதுவான வழிகாட்டல்களை வாசிப்பதும், அறிவுறுத்தல் காணொளியைப் பார்ப்பதும் இன்றியமையாதது எனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
கட்டண விபரங்கள்: ஒரு பாடத்திற்கான மறுசீலனைக் கட்டணம் ரூபா 200 ஆகும். இக்கட்டணத்தை கடன் அட்டை (Credit Card), வரவு அட்டை (Debit Card) அல்லது தபாலகங்கள் (Post Office) மூலம் செலுத்த முடியும். இணையவழியில் (Online) ஒரு முறை மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், கட்டணம் செலுத்திய பின்னர் பணம் மீண்டும் திருப்பித் தரப்பட மாட்டாது.
கட்டணத்தைச் செலுத்திய பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இது வெற்றிகரமாக முடிந்ததும் விண்ணப்பதாரருக்கு குறுஞ்செய்தி (SMS) அறிவித்தலொன்றும் வழங்கப்படும்.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 1911 என்ற உடனடி அழைப்பு இலக்கம் அல்லது 0112 785 231 உள்ளிட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொண்டு வினவல்களை மேற்கொள்ள முடியும் எனப் பரீட்சைத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.



